Friday, 31 December 2010

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்போகும் ஆந்திர அரசு

ஹைதராபாத்,ஜன.1:முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது ஆந்திர பிரதேச அரசு சுமத்திய வழக்குகளை வாபஸ் பெறப்போகிறது.

தனி தெலுங்கானா மாநிலம் கேட்டுப் போராடியவர்கள் மீதான 1667 வழக்குகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என நம்பத் தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்தில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக வீதியில் இறங்கிப் போராடிய முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளைத்தான் வாபஸ் பெற ஆந்திர மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியதாக முதலில் போலீஸ் கூறியது. பின்னர் சி.பி.ஐ விசாரணையில் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என தெரியவந்தது.

குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கைதுச் செய்திருந்தது. முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீஸ்.

ஆருஷி தல்வார் கொலைவழக்கு: டாக்டரிடம் குடும்ப உறுப்பினர் செல்வாக்கை பயன்படுத்தியதாக சி.பி.ஐ

நொய்டா,ஜன.1:உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டாக்டர் தம்பதிகளின் 14 வயது மகள் ஆருஷி தல்வார் 2008-ம் ஆண்டு மே 16-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதே நாளில்தான் வீட்டின் உதவியாளர் ஹேம்ராஜ் என்ற நேபாளத்தைச் சேர்ந்தவரும் வீட்டின் மொட்டை மாடியில் இறந்துள்ளார். ஆனால் இவரது சடலம் இரண்டு நாள்களுக்குப் பிறகே மீட்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆருஷி தல்வார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்ற இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க போதுமான தடயம் இல்லை என்றும் இந்த வழக்கை முடித்துக் கொள்ளப் போவதாக கடந்த புதன்கிழமை காஸியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நுபூர் தல்வார் ஆகியோர் ஆருஷியின் இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரிடம் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் செல்வாக்கை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

முதலில் இந்த கொலையை ஆருஷி தல்வாரின் தந்தை ராஜேஷ் தல்வார் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் ஆருஷியின் கொலையில் வீட்டுப் பணியாளர்கள் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகமேற்பட்டது. பின்னர் விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என கண்டறியப்பட்டது.

அதேவேளையில், ஆருஷி கொலை வழக்கில் சமீபத்தில் உருவான சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.

ஆருஷி கொலைச் செய்யப்பட்டுள்ளார், பின்னர் ஏன் அவருக்கு நீதிக் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

ஆருஷி கொலை வழக்குத் தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஆருஷி வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ இயக்குநரிடம் முழு விவரங்களைக் கேட்டேன். இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என்றும் கேட்டேன் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
செய்தி:பாலைவனதூது 

மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள்: சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி,ஜன:மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தொண்டர்கள் கொலை செய்யப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் அந்த மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரத்தின் கடிதங்களை மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் மாநிலத்தில் இப்போது தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ள சிதம்பரம், கூலிப்படை மூலம் சில குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸூக்கு ஆதரவாக செயல்படும் மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்ட் தொண்டர்களை கொலை செய்து வருவதாக புத்ததேவ் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கம்யூனிஸ்ட்களால் கொலை செய்யப்படுவதாக அந்த இரு கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

பல இடங்களில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணி என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்பதும் திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசிடம் மம்தா எடுத்துச் சென்றார்.

இதையடுத்து மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சிதம்பரம் கடும் விமர்சனங்களுடன் கடிதம் எழுதினார். இதற்கு புத்ததேவ் எதிர்ப்புத் தெரிவித்து பதிலளித்தார். மேற்கு வங்க அரசிடம் சிதம்பரம் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

டெல்லி வந்து தன்னை சந்திக்குமாறு பட்டாச்சார்ஜிக்கு கடிதத்தில் சிதம்பரம் அழைப்பு விடுத்திருந்தார்.

அஞ்சல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: இதனிடையே சிதம்பரத்தின் கடிதம் மேற்கு வங்க அரசுக்கு தாமதமாக செல்ல காரணமாக இருந்த கொல்கத்தா அஞ்சல் துறை அலுவலர்கள் 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 பேர் பணியிடமாற்றம் செய்ப்பட்டனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் அஞ்சல் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மதியம் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக சிதம்பரம் எந்த கடிதமும் தனக்கு அனுப்பவில்லை என்று பட்டாச்சார்ஜி கூறியிருந்தார். அஞ்சல் துறையால் தான் சிதம்பரத்தின் கடிதம் தாமதமாக வந்தது பின்னர் தெரியவந்தது.
செய்தி:பாலைவனதூது

டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம்

பெங்களூர்,ஜன.1:மருத்துவரும் மனித உரிமைப் போராளியுமான டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

பெங்களூர்,ஜன:டாக்டர் பினாயக் சென் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நாட்டின் நீதிபீடத்தின் புனிதத் தன்மையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பரந்த நோக்கில்,நீதிமன்றத்தின் பிறழ்வான கருத்துக்கள் எதிர்காலத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கும், அமைப்புகளுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும். இந்த தீர்ப்பு, நீதிமன்றம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல்படுகிறதா? அல்லது ஆட்சியாளர்களின் நிர்பந்தம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் செயல்படுகிறதா? என்பதுக் குறித்து வலுவான சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் பினாயக்சென் விருதுப் பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மனித உரிமை ஆர்வலராவார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பழங்குடி மக்களுக்கு சேவை புரிய தனது வாழ்வை அர்ப்பணித்தவர். சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்த பினாயக் சென்னின் கடமையுணர்விற்கு ஆயுள்தண்டனையும், தேசத் துரோகமும் பரிசாக கிடைத்துள்ளது உண்மையிலேயே பரிதாபகரமானதாகும்.

ஆனால், பலகோடிகளை ஊழல் புரிந்த அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரியும்பொழுது மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

பொதுசமூகம் பினாயக் சென்னிற்கு ஆதரவளிக்க முன்வந்து அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு விடுக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மனித உரிமை ஆர்வலர்களுடனும், அமைப்புகளுடனும் இணைந்து டாக்டர் பினாயக் சென்னிற்கு நீதிக்கிடைக்க போராடும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது. என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை - ஷார்ஜா நீதிமன்றம் நிறுத்திவைத்தது

ஷார்ஜா,ஜன.1:பாகிஸ்தான் நாட்டவரைக் கொலைச்செய்த வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிகளாக கருதப்படும் 17 இந்தியர்களின் மரணத் தண்டனையை ஐக்கிய அரபு அமீரக மாநிலமான ஷார்ஜாவின் ஷரீஅத் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த 16 நபர்களுக்கும், ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ஒருவருக்கும் ஷார்ஜாவின் ஷரீஅத் நீதிமன்றம் கடந்த 2010 மார்ச் மாதம் மரணத் தண்டனையை விதித்தது.

கடந்த 2010 ஜனவரி மாதத்தில் ஷார்ஜாவில் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் 17 இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டவரைக் கொலைச் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்துதான் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொலை நடந்த இடம் ஷார்ஜா மாநிலத்தின் அல் ஸஜாஅ பகுதியாகும். துவக்கத்தில் மரணமடைந்த பாகிஸ்தானியரின் குடும்பத்தினர் கொலைக்கு பதிலாக எவ்வித நஷ்ட ஈட்டையும் பெறமாட்டோம் எனவும், குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமெனவும் கூறியிருந்தனர்.

தற்பொழுது அவர்கள் நஷ்ட ஈட்டை பெற ஒப்புக்கொண்டதால் மரணத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நஷ்ட ஈடு வழங்கப்படாத சூழலில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படும்.

அரபு நாடுகள் மீது அணுகுண்டு வீச இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது

லண்டன்,ஜன.1:அரபு நாடுகளுடன் போர் ஏற்பட்டால் இஸ்ரேல் அணுகுண்டு வீச தயாராக இருந்ததாக பிரிட்டன் தூதரக ஆவணம் தெரிவிக்கிறது.

1980 ஆம் ஆண்டு இஸ்ரேலில் பிரிட்டன் தூதராக பணியாற்றிய ஜோன் ராபின்சன் பிரிட்டன் வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ஆவணத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அணு ஆயுதத் தாக்குதலைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென ரோபின்சன் சுட்டிக்காட்டுகிறார்.

1980 ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி அனுப்பிய ஆவணத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை 30 ஆண்டுகள் கழித்து வெளியிடலாம் என்ற சட்டத்தின்படி கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.

மேற்காசியாவில் அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சி தோல்வியடைந்த சூழலில் இஸ்ரேலின் சூழ்ச்சி வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில் ஒரே அணு ஆயுதநாடாக இஸ்ரேல் உள்ளது. எங்களிடம் 200 அணுகுண்டுகள் இருப்பதாக 1986 இல் அணுசக்தி வல்லுநரான மொர்தேவாய் வனுனு தெரிவித்திருந்தார். நெஜீவில் திமோனா அணுசக்தி நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியவர் வனுனு.

தென்னாப்பிரிக்காவிற்கு அணு ஆயுதத்தை விற்க இஸ்ரேல் கடந்த 1975 ஆம் ஆண்டு வாக்குறுதியளித்திருந்தது என்பதை பிரிட்டீஷ் தின இதழான கார்டியன் கடந்த மேமாதம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பாலவனதூது

மின்னி மறைந்த 365 நாட்கள்

அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த நாட்களை அளித்துவிட்டு 2010 ஆம் ஆண்டு விடைப்பெற்றது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் துபாயில் வைத்து மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டது முதல் வெனிசுலா நாட்டின் பிரதிநிதியின் விசாவை அமெரிக்கா ரத்துச் செய்தது வரையிலான சிறியதும், பெரியதுமான என பல சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறின.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச்சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்யப்பட்டதும், மெக்ஸிக்கோ வளைகுடாவில் பிரிட்டீஷ் எண்ணைக் கம்பெனியின் எண்ணைக் கிணறு வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்காவின் அதீத ரகசியங்கள் விக்கிலீக்ஸினால் அம்பலமானதும் கடந்த ஆண்டில் நமது கவனத்தை ஈர்த்த சம்பவங்களாகும்.

கால்பந்து வீரர்கள் மண்டேலாவின் நாட்டில் பந்தை உருட்டியபொழுது உலகம் ஆப்பிரிக்காவை உற்றுநோக்கியது நேற்று நடந்ததுபோல் உள்ளது.

ஹைத்தியிலும், பாகிஸ்தானிலும், சீனாவிலும், தாய்லாந்திலும் தற்பொழுது ஆஸ்திரேலியாவிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் கண்டோம். இந்த ஆண்டின் பிந்தைய நாட்கள் நமக்கு மறக்கமுடியாத நிகழ்வுகளை அளித்துச் சென்றது.

அவற்றில் சில:
உலகம் சிரித்தது சிலியுடன்:
அதிர்ச்சியுடன் கேட்ட செய்திக்கு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. பூகம்பத்தால் தகர்ந்துபோன சிலியின் சான்ஜோஸ் சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்பதனை 17 நாட்கள் கழித்து உலகம் அறிந்தபொழுது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. வெளி உலகினோடு தொடர்பு கொள்ளவியலாமல் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கும், மனோநிலை பாதிக்கப்படாமலிருக்கவும் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். 69 தினங்களுக்கு பிறகு 33 தொழிலாளர்களும் சுரங்கத்தை விட்டு வெளியேறும் வரை உலகம் மனமுருகி பிரார்த்தித்தது சிலியுடன்.

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தின் மீது விழுந்த அடி
முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்குவிதமான புர்காவை அணியக்கூடாது என ஐரோப்பாவில் வலதுசாரிகள் கச்சைக்கட்டி களமிறங்கிய வருடமாக 2010 அமைந்தது.

பிரான்சிலும், ஸ்பெயினில் சில நகரங்களிலும் பெண்கள் புர்காவை அணிவது தடைச்செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரை நிர்வாணத்துடன் பெண்கள் சுற்றித் திரிவதை சுதந்திரம் எனக்கூறும் மேற்கத்திய உலகம் தங்களது முகத்தை தாமாகவே மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு தனது இரட்டை முகத்தை பகிரங்கப்படுத்தியது.

புர்காவை தடைச் செய்ததற்கு ஆட்சியாளர்கள் கூறிய காரணம் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என பதிலளித்தனர்.

இத்தாலியும், நெதர்லாந்தும் பிரான்சின் முட்டாள்தனத்தை பின்பற்றியது. ஒடுக்கப்பட்ட ரோம இனத்தவரை நாடு கடத்தப் போவதாக பிரான்சு மிரட்டியது.

பார்ஸல் குண்டுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக மாறியது. ஆனால், அதன் பெயரால் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை.

தோற்றுப்போன மேற்காசிய அமைதி முயற்சி
அமெரிக்காவின் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவங்கியது.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தது எவ்வித பலனையும் தரவில்லை.

10 மாத மொரட்டோரியத்திற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற நிர்மாணத்தை துவக்கியபொழுது பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. அமைதியை விரும்பாத இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஏற்கனவே ஹமாஸ் முன்னறிவிப்பு செய்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
அமெரிக்காவின் ஆதரவுடன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் தினந்தோறும் அப்பாவி மக்களுக்கு கொலைக் களமாகும் பாகிஸ்தானை 2010 ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பிரளயம் பிடித்து உலுக்கியது.

செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த பெய்த மழையால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 ஆயிரம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு லட்சம் கால்நடைகள் செத்து மடிந்தன. விவசாயத்துறை முற்றிலும் சீர்குலைந்த பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஐ.நா கோரிக்கை விடுத்தது.

சுனாமி, ஹைத்தி பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு உலக சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு, பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஆக்கிரமிப்பின் மீதிக்கதை
2003 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு பாதியளவு முடிவடைந்த பொழுது மீதமாக அமைந்தது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை. மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பொழுதிலும் எட்டு மாதத்திற்கு பிறகுதான் ஷியா, சுன்னி, குர்து பிரிவினர் கூட்டாக இணைந்து புதிய அரசை உருவாக்கினர்.

91 இடங்களை கைப்பற்றிய நூரி அல் மாலிகி பிரதமரானார். இயாத் அல்லாவியின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. ஷியா அறிஞர் முக்ததா அல் ஸத்ரின் ஆதரவு கிடைத்ததன் மூலம் நூரி அல் மாலிகி ஈராக் அதிபராக மீண்டும் பதவியேற்றார். நவம்பரில் பதவியேற்ற அதிபர் ஜலால் தலபானி மாலிகியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், ஈராக்கில் பாதுகாப்பு மேம்பட்டதாக கூறும் அமெரிக்காவின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கின்றன அந்நாட்டின் வீதிகளில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகள்.

அம்பலமான ரகசியங்கள்
அமெரிக்க தூதரகச் செய்திகளை ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அஸென்ஜே ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் நோக்கியது.

உலகின் ஒவ்வொரு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்கள் வழியாக அந்நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்பதுதான் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் சாராம்சம்.

2006 முதல் விக்கிலீக்ஸின் ரகசிய கண்கள் பல்வேறு நாடுகளின் ரகசியங்களில் நோட்டமிட்டன. பல செய்திகளையும் அவர்கள் வெளியுலகிற்கு அளித்தனர். ஆனால், 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்வதன் வீடியோ காட்சியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டதுடன் விக்கிலீக்ஸ் இணையதளம் உலகின் பார்வையை தன் பக்கம் நோக்கி இழுத்தது.

ஆப்கானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜேவும் அமெரிக்காவினால் குறி வைக்கப்பட்டனர்.

நவம்பரில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசியங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜூலியன் கைதுச் செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.

உஸாமா பின் லேடனுக்கு அடுத்து அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதியாக ஜூலியன் அஸென்ஜே மாறியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கூட்டுப்படுகொலை
காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியில் புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்தது இஸ்ரேல்.

சுய பாதுகாப்பிற்காக சுட்டதாக இஸ்ரேல் தனது அக்கிரம செயலை நியாயப்படுத்தியது. இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் துருக்கி விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் மதிக்கவேயில்லை. இஸ்ரேலின் கொடூர ராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தன.

ஹைத்தி துயரத்தின் பூமி
ஜனவரி 12 ஆம் தேதி ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸில் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பலிவாங்கப்பட்ட ஹைத்தியில் பின்னர் நடந்த அதிபர் தேர்தலிலும் தீவிர வன்முறை வெடித்தது. சில மாதங்களுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் பலரும் வீடுகளை இழந்தனர்.

ஹைத்தி அகதிமுகாம்களில் தூய்மையற்ற நிலையின் காரணமாக காலரா நோய் வேகமாக பரவுகிறது. நோயால் பீடிக்கப்பட்ட 3333 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா படையில் நேபாள ராணுவத்தினரிடமிருந்துதான் காலரா நோய் பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தீரா துயரத்துடன் ஹைத்தி மக்கள் புதுவருடத்தை வரவேற்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட துயரம்
மெக்ஸிக்கோ வளைகுடாவில் கரையிலிருந்து 48 மைல்கள் தொலைவிலிருக்கும் பெயாண்ட்(beyond) பெட்ரோலியம் எனப்படும் நிறுவனத்தின் எண்ணை கிணறு கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டது.

தினமும் ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. பின்னர் தினமும் ஐந்து ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் 25 ஆயிரம் முதல் 80 பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் பல நாட்களுக்கு பிறகே உலகிற்கு தெரியவந்தது. எண்ணை கசிவு கடலில் கலந்ததால் ஏற்பட்ட விஷத் தன்மையின் காரணமாக இறந்துபோன மீன்கள் அமெரிக்க கடற்கரையில் ஒதுங்கின. எண்ணை கசிவை முற்றிலும் அடைப்பதற்கு பல மாதங்கள் ஆகின. அமெரிக்க மீன்பிடித்துறை - சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக மாறியது இச்சம்பவம். பெயாண்ட் பெட்ரோல் கம்பெனி அமெரிக்காவிற்கு 2 ஆயிரம் கோடி டாலர் நஷ்டஈடு வழங்கியது.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் பொதுக்கடனை அடைப்பதற்கு வேலைவாய்ப்பையும், சலுகைகளையும் குறைத்தது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுத்துறை பணியாளர்களின் சலுகைகளை குறைத்தனர். வரியை அதிகரித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வீதியில் இறங்கி போராடிய மக்களை போலீஸ் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமைய தளர்த்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

செய்தி:பாலைவனதூது 

Monday, 27 December 2010

ஈரானுடனான இராணுவத் தொடர்புகளை வரவேற்கும் கட்டார்



ஈரானுடனான இராணுவத் தொடர்புகளை மேம்படுத்துவதில் தமது நாடு அக்கறைகாட்டி வருவதாகக் கட்டார் கடற்படைக் கமாண்டர் முஹம்மத் நாஸர் முபாரக் அல் முஹன்னதி தெரிவித்துள்ளார்.

ஈரான்- கட்டார் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஈரான் இஸ்லாமியப் புரட்சிப் படையணியினரின் தோஹா விஜயம் அமைந்துள்ளது எனவும் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை நிலைநாட்டும் முயற்சியில் இருநாடுகளுக்கிடையிலான இத்தகைய நல்லுறவு விஜயங்கள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும் எனத் தாம் விழைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராணுவ மற்றும் ஏனைய துறைகளில் ஈரானுடனான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் தாம் அதிகக் கரிசனை கொண்டுள்ளதாக கட்டார் கடற்படைக் கமாண்டர் முஹன்னதி வலியுறுத்தியுள்ளார்.

கட்டாரில் இருந்து ஈரானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், ஈரானின் முக்கிய இராணுவப் பிரமுகர்களைச் சந்தித்ததோடு விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையையும் பெற்றுக்கொண்டார். இந்த மரியாதை அணிவகுப்பின்போது ஷஹீத் ஸொஹ்ராபி, ஷஹீத் தாரா, ஷஹீத் மஹ்தாவி எனும் மூன்று ஏவுகணைக் கப்பல்களும், நாஸர் 111, நாஸர் 112 எனும் இரண்டு போர்க்கப்பல்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் கருத்துக்களுக்கு மறுமொழியளித்துப் பேசிய கட்டார் படையணிகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹமாத் பின் அலி அல் அதிய்யா, ஈரானுடனான தரை மற்றும் கடற்படைப் பயிற்சிகளில் கூட்டாக இணைந்து செயற்படத் தமது நாடு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (24.12.2010) ஈரானியக் கடற்படைத் தலைவர் ஜெனரல் அலி ரெஸா நாஸிரியையும் தோஹாவுக்கான ஈரானியத் தூதுவர் அப்துல்லாஹ் ஸொஹ்ராபியையும்  ஜெனரல் ஹமாத் பின் அலி அல் அதிய்யா சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த சில மாதகாலமாக ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20 ஆம் திகதி ஈரானுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட கட்டார் அதிபர் ஷேய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. 
 செய்தி :பாலைவனதூது

சுமார் 2 பில்லியன் டாலருக்கு கூகுலின் அலுவலகம்

உலக புகழ்பெற்ற நிறுவனமான கூகுல், அமெரிக்காவின் வர்த்தக நகரான நியூயார்கில் தனது அலுவலகத்தை தொடங்க இருக்கிறது. இதற்கான சுமார் 2 பில்லியன் டாலரில் 18 மாடி கட்டிடத்தை விலைக்கு வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சுமார் 280,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கட்டிடத்தில் சுமார் 2000 பேர் கூகுல் நிறுவனத்திற்காக வேலை பார்ப்பார்கள்.  மேலும் கீழ் மாடி தளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களான நைக், அர்மானி எக்சேஞ் போன்றவற்றின் காட்சி கடைகள் தொடர்ந்து இருந்து வரும் என தெரிகிறது. கட்டிடம் வாங்கியதை உறுதி செய்த கூகுல் நிறுவனம், விலையை தெரிவிக்கவில்லை.
எனினும் லாஸ் ஏஞலீஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள செய்தியில் கட்டிடத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர் இருக்கும் என்றும், 2010 ஆண்டின் அமெரிக்காவில் வாங்கப்பட்ட ஆக அதிக மதிப்பிலான கட்டிடம் என மதிப்பிட்டுள்ளது.
செய்தி:பாலைவனதூது 

அமெரிக்கப் போர்விமானத் தாக்குதல் - 18 பாகிஸ்தானியர் பலி


கடந்த திங்கட்கிழமை (27.12.2010) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியமான வஸிரிஸ்தானில் ஐ.நா.வின் அனுமதிக்குப் புறம்பாக இடம்பெற்ற அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 18 பாகிஸ்தானியப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது ஐந்து ஏவுகணைகள் எறியப்பட்டதாகவும், வடக்கு வஸிரிஸ்தானின் மீர் அலி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய வான்வழி ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாலிபான் படையணியினரை இலக்காகக்கொண்டே இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ள போதிலும், இத்தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தைப் பாகிஸ்தானியப் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய நியாயமற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளார். 
 செய்தி :இந்நேரம்

257 கோவில்களை புதுப்பிக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் உள்ள 257 பழமையான கோவில்களை புதுப்பிக்க மத்திய நிதி ஆணையம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கூறினார்.

வீரபத்திரர் பக்தர் அமைப்பு சார்பில் வீரபத்திரர் 3ஆவது ஆண்டு கருத்தரங்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா பள்ளியில் உள்ள கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இந்து சமய கட்டுப்பாட்டின் கீழ் 38 ஆயிரம் கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 56 மடங்கள் அடங்கும். இந்த மடங்களில் 56 கோவில்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 4.5லட்சம் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் மீதம் உள்ள நிலங்கள் மடத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

தமிழகத்தில் பெரிய, சிறிய கோவில்களில் 927 மரத்தேர்கள் உள்ளன. இதில் 300 தேர்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 1948ஆம் ஆண்டு பழனியில் உள்ள முருகன் கோவிலில் தங்க தேர் உருவாக்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 48 தங்கத் தேர்கள் இயங்கி வருகின்றன. 48ஆவது தேர் ஆனைமலை மாசானி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டதாகும். இதே போல் பாரியூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 257 கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். இந்த கோவில்களை புதுப்பிக்க மத்திய அரசின் 13ஆவது நிதி ஆணையம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக ரூ.25 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள 97 கோவில்களில் மேற்கொள்ளப்படும். இந்த பணி வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது. இவை 4 கட்டங்களாக நடைபெறும். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 20 கோவில்களும் அடங்கும்.

செய்தி:பாலைவனதூது 
seithi

எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல் - தேவகவுடா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் நில ஆக்கிரமிப்பு, ஊழல் குறித்த விபரங்களைப் பட்டியலிட்டு மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா புத்தகம் வெளியிட்டுள்ளார்.அதில் எடியூரப்பா அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புத்தகத்தை பெங்களூரில் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கர்நாடக ஊழலை விளக்கும் இந்த புத்தகத்தில் பெங்களூரு,மைசூர் உள்கட்டமைப்பு திட்ட ஊழல்,சுரங்கத் தொழில் முறைகேடு, நில ஆக்கிரமிப்பு, நில ஒதுக்கீடு ஆகிய ஊழல்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இந்த புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

கர்நாடகாவை ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இதில் உள்ளன. மத்திய புலனாய்வு துறை, அமலாக்க துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

நாட்டிலேயே மெகா ஊழல்வாதியாக எடியூரப்பா திகழ்கிறார். நான் கவர்னர் பரத்வாஜை சந்தித்து எடியூரப்பாமீதான புதிய ஊழல் புகார்களை கொடுக்க இருக்கிறேன். பாரதீய ஜனதாவின் நில மோசடி விவகாரத்தை மக்கள் மத்தியில் விளக்கி கூறப்போவதாகவும் தெரிவித்தார்.

தேவகவுடாவின் புத்தகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா தேசிய அரசியலில் முன்னேறுவதற்கான வழிகளை பார்ப்பது நல்லது" என்று கிண்டலடித்தார்.
செய்தி  :பாலைவனதூது

நீரா ராடியாவுக்கு பேருதவி புரிந்தார் பாஜகவின் அனந்த்குமார்: முன்னாள் பார்ட்னர் தீரஜ் சிங்

டெல்லி,டிச.27:நீரா ராடியாவுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் என்று கூறியுள்ளார் ராடியாவின் முன்னாள் பங்குதாரரான ராவ் தீரஜ் சிங்.
நீரா ராடியாவுடன் முன்பு இணைந்து செயல்பட்டவர் சிங். தற்போது நீரா ராடியா குறித்த பல தகவல்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமாக பாஜகவுடன் ராடியாவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, பாஜக ராடியாவுக்காக என்னென்ன செய்தது என்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ராடியா மகனை கடத்தியவர்:ராடியாவின் அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பவர் சிங். அவருடன் தொழில் பார்ட்னராக இருந்தார். பின்னர் ராடியாவின் மகன் கரணை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவர். 1995ம் ஆண்டு முதல் 2002 வரை ராடியாவுடன் இணைந்திருந்தார் சிங். அப்போது ராடியா நடத்தி வந்த கிரவுன் மார்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இவரும் ஒரு பார்ட்னராக இருந்தார்.

ராடியா குறித்து அவர் இந்தியா டுடே இதழுக்கு அளித்துள்ள பேட்டி...நான் முதல் முறையாக ராடியாவை சந்தித்தது 1994ம் ஆண்டுதான். அப்போது நான் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் போக்குவரத்து கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தேன். ராடியா, சஹாராவின் ஆலோசகராக இருந்தார். பின்னர் தனது சொந்த நிறுவனமான கிரவுன் மார்ட் நிறுவனத்தில் பணியாற்ற என்னை அழைத்தார். பின்னர் இருவரும் 1995ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம். அங்கு சில நிறுவனங்களையும், ஹோட்டல் தொழிலையும் மேற்கொண்டார் ராடியா.

கேஎல்எம் யுகே நிறுவனத்துக்கு உதவிய ராடியா:பின்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார் ராடியா. அங்கு மோடிலப்ட் நிறுவனத்திற்கு இரண்டு விமானங்களை விற்பது தொடர்பாக எங்களை அணுகியது கேஎல்எம் யுகே. நிறுவனம். ஆனால் சில எண்ணை நிறுவனங்களுக்குத் தர வேண்டிய பண பாக்கிக்காக அந்த விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கிலிருந்து விடுபட எங்களது உதவியை நாடியது கேஎல்எம். இந்தியாவில் என்ன செய்தால் காரியத்தை சாதிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் வக்கீல்கள் மூலமாக கடுமையாக முயன்றோம். கடைசியில், விமானங்களை விடுவிக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. விமானங்களை விடுவிப்பதற்காக எங்களது நிறுவனம் ரூ.2.5 கோடியை செலவிட்டது.

'பாஜக ஆட்சியில் ராடியா செல்வாக்கு உயர்ந்தது':மத்தியில் 1998ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ராடியாவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. அதிலும், அனந்த்குமார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரான பின்னர்தான் ராடியா வேகமாக வளர்ந்தார்.

கேஎல்எம் விவகாரத்தை வெற்றிகரமாக டீல் செய்ததால் ராடியாவை பல விமான நிறுவனங்கள் அணுகின. சஹாராவுக்காக சில ஹெலிகாப்டர்களை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம். ஏர்பஸ் கன்சார்டியம் ராடியாவுக்கு முழு ஆதரவாக இருந்தது. கர்நாடகா, மகாராஷ்டிர அரசுகளுக்கு யூரோகாப்டர்களை பெற்றுக் கொடுத்தார் ராடியா. அப்போது மகாராஷ்டிராவில் பாஜக அரசு இருந்தது.

இழுத்துப் போட்டு உதவிய அனந்த்குமார்:
மறுபக்கம் அனந்த்குமாருடன் தனது உறவை நெருக்கமாக்கிக் கொண்டார் ராடியா. எங்களுக்காக பல விஷயங்களை அனந்த்குமார் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். அரசின் பல ரகசிய தகவல்களை பெற்று அவற்றை பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவார் ராடியா. சில சமயங்களில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களைக் கூட அவர் பெற முயன்றதுண்டு.

ஒருமுறை நான், ராடியா, அவரது சகோதரி கருணா ஆகியோர் ஜூரிச் சென்றோம். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவதற்காக அங்கு சென்றோம். இதற்கு பாஸ்போர்ட் தகவலே ஆதாரம். எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது என்ற தகவலும் என்னிடம் உள்ளது.

சுவிஸ் வங்கியில் பணம்: 1998 முதல் 2001 வரை பல்வேறு டீல்கள் மூலம் ராடியா சம்பாதித்த பணத்தையெல்லாம் ஜூரிச் வங்கியில்தான் போட்டு வைத்துள்ளார். அதேபோல சேனல் தீவிலும் ஒரு வங்கிக் கணக்கை அவர் வைத்துள்ளார். எவ்வளவு பணம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கணிசமான பணம் உள்ளது என்பது மட்டும் உறுதி.

ஜெட் ஏர்வேஸை முடக்கிய ராடியா:
ஒருமுறை ஜெட் ஏர்வேஸ் விமானம் வாங்க அனுமதி கோரி சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதை தனது செல்வாக்கால் முடக்கி வைத்தார் ராடியா. இதனால் ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயல், ராடியா மீது கடும் கோபமடைந்தார். மேலும், பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏடிஆரை அணுகி, நரேஷ் கோயல் விமானத்தை முடக்கிப் போட அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நீங்கள் விற்க வேண்டாம். மேலும், கோயல் பணம் தர மாட்டார். நீங்கள் எங்களிடம் விற்றால் உடனடியாக பணம் கிடைக்கும் என்று கூறினார் ராடியா. இதை ஏடிஆர் நிறுவனமும் ஏற்றது. இந்த டீல் மூலம் ரூ.1.86 கோடி பணம் எங்களுக்குக் கிடைத்தது.

அனந்த்குமாருடன் மட்டும் நிற்கவில்லை ராடியாவின் பாஜக தொடர்புகள். அவரையும் தாண்டி வியாபித்திருந்தது. இதன் காரணமாக 2002ம் ஆண்டு வசந்த் கன்ச் பகுதியில் நீராவின் டிரஸ்டுக்காக பெரிய அளவிலான நிலத்தை பாஜக அரசு ஒதுக்கிக் கொடுத்தது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார்.

டாடாவின் அறிமுகம்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இந்திய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக ராடியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதுதான் ராடியாவின் செல்வாக்கு குறித்து ரத்தன் டாடாவுக்கு தெரிய வந்து, அவர்களுக்கிடையே அறிமுகம் ஏற்பட்டது. டாடா குழுமத்துடன் ராடியா நெருக்கமாக ஆரம்பித்த பின்னர் எனக்கும், ராடியாவுக்கும் இடையிலான உறவில் சரிவு ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஜூரிச் வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தால்தான். எனக்கு ராடியா ரூ.1.2 கோடி பணம் தர வேண்டியிருந்தது. ஆனால் அவர் தரவில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பணத்தை எடுத்து வருவதில் சிக்கல் இருப்பதாக கூறினார் ராடியா. ஆனால் அது உண்மையில்லை என்பது எனக்குத் தெரியும்.

எனக்குப் பணம் தராமல் இழுத்தடித்த ராடியா, தனது பணத்திலிருந்து ஒரு பகுதியை ஒரு பாஜக தலைவருக்குக் கொடுத்தார். அதிகார பேரம் தவிர ஹவாலா, பண மோசடி ஆகியவற்றையும் செய்து வந்தார் ராடியா. இவ்வாறு கூறியுள்ளார் சிங்.

அனந்த்குமாரை நான் அறிமுகப்படுத்தவில்லை - சுவாமிகள்: இதற்கிடையே கர்நாடகத்தி்ன் பெஜாவர் மடாதிபதி விஸ்வதீர்த்த சுவாமிகள் தான் ராடியாவை, அனந்த்குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக ஒரு சர்ச்சை நிலவுகிறது. ஆனால் இதை சுவாமிகள் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நீரா ராடியா விவகாரத்தில் தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துள்ளனர். நான் அனந்த்குமாருக்கு ராடியாவை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. எனது சிஷ்யர்கள் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார் ராடியா. மற்றபடி எந்த அரசியல் கட்சி சார்பிலும் அவர் எனக்கு அறிமுகமாகவில்லை. டெல்லியில் வசந்த் கன்ச் பகுதியில் உள்ள நிலம், ராடியாவின் அறக்கட்டளைக்குத் தொடர்பானதல்ல. அந்த நிலம் என்னுடையதாகும். அது ராம விட்டலா சிக்ஷன சேவா சமிதிக்கு உரித்தானதாகும். இந்த சமிதி பதிவு செய்யப்பட்டதாகும். நான் அந்த சமிதியின் தலைவராக உள்ளேன். அதில் அரை ஏக்கர் நிலம், பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலம், தேவெ கெளடா பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டதாகும்.

சமிதியின் அடிக்கல் நாட்டு விழாவில் அப்போது துணை முதல்வராக இருந்த அத்வானி மட்டுமல்ல, டெல்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராடியா அழைத்து அவர்கள் வரவில்லை. மாறாக, நான் அழைத்துதான் வந்தனர். அனைத்துக் கட்சியிலும் எனக்கு ஆதரவாளர்கள், விசுவாசிகள் உள்ளனர். நான் டெல்லியில் பெற்ற நிலம் உரிய முறைப்படி, சட்டத்திற்கு உட்பட்டே வாங்கியதாகும் என்று கூறியுள்ளார் விஸ்வதீர்த்தர்.
செய்தி:பாலைவனதூது

பெரியபட்டிணம் அருகே படகு விபத்தில் 15 பேர் பலி

பெரியபட்டிணம்,டிச.27:ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டிணம் அருகே நடுக்கடலில் நேற்று படகு கவிழ்ந்ததில், சுற்றுலா சென்ற 15 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பெரியபட்டிணத்தை சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இவர், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். உறவினரின் திருமண நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் மாத விடுமுறையை கழிக்க, அப்துல் குத்தூஸ் குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று காலை அவரும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் அய்யூப்கான், ரசூல் ஆகியோருக்கு சொந்தமான இன்ஜின் பொருத்தப்பட்ட 2 படகுகளில் பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள முள்ளித்தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன் ஆண்கள் சென்றனர். அய்யூப்கான் கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 30௦ பேர் சென்றுள்ளனர்.

தீவுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற போது, படகு லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். மேலும் அப்போது ஏற்பட்ட பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்தது.

அந்த படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர். இதைப் பார்த்த மற்றொரு படகில் இருந்தவர்கள், அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். மேலும் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடற்கரையில் இருந்த மீனவர்கள் 3 படகுகளில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மற்றொரு படகில் சென்றவர்கள் மற்றும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இருவரின் உடல் இன்று காலை மீட்க்கப்பட்டது.

பலியானவர்களில் 6 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் 7 குழந்தைகள் அடங்குவர்.

முதலில் மீட்கப்பட்ட 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இருவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

சுனாமி நினைவு தினமான நேற்று இந்த சம்பவம் நடந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி:பாலைவனதூது 

அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் நான்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன

புதுடெல்லி,டிச.27:அஜ்மீர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் நான்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களை ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை வெளியிட்டுள்ளது.

பாவேஷ், திவேஷ், ஸன்னி, மேஹுல் ஆகியோர்தான் அந்த பயங்கரவாதிகள்

குண்டுவெடிப்புக்காக பயன்படுத்திய கார் மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தைச் சார்ந்த ஆனந்த் ராஜ் கட்டாரா என்பவருடையது. தேவாஸைச் சார்ந்தவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான சுட்டுக்கொல்லப்பட்ட சுனில் ஜோஷிதான் இக்காரை பயன்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹர்ஷத் பாய் சோலங்கிக்கு ஜோஷியின் கொலையில் பங்குள்ளது தெளிவாகியுள்ளது.

குஜராத் இனப்படுகொலையில் பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலையில் முக்கிய குற்றவாளி சோலங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாரே ஜோஷி கொலை வழக்கிலும், சோலங்கி வெடிக்குண்டு வழக்கிலும் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரகசியம் வெளியே கசியாமலிருக்க சுனில் ஜோஷியை அவரது சகாக்களான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளே கொன்றுள்ளனர்.

சுனில் ஜோஷியின் கொலையை விசாரித்துவரும் புலனாய்வுக் குழுதான் இந்தூரிலிருந்து காரை மீட்டனர் என தீவிரவாத எதிர்ப்பு கூடுதல் எஸ்.பி சத்யேந்திர சிங் ரன்வாத் தெரிவித்தார். இதே வாகனத்தில்தான் ஜோஷியை கொலைச் செய்வதற்கு வந்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி குற்றத்தை நிகழ்த்திய பின்னர் பயங்கரவாதிகள் அதே காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதனை ஜோஷியின் கொலையை விசாரிக்கும் மத்தியபிரதேச போலீஸ் அதிகாரி வினோத் சிங் குஷ்வஹ் தெரிவித்துள்ளார்.

அஜ்மீரில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக தயார் செய்த வெடிப்பொருட்களை கட்டாரேயும், ஜோஷியும் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் காரில் குஜராத் மாநிலம் கோத்ராவிற்கு கொண்டுவந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து பாவேஷ், திவேஷ், ஸன்னி, மேஹுல் இவ்வழக்கில் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட முகேஷ் வஸானி ஆகியோர் சேர்ந்து அஜ்மீருக்கு வந்துள்ளனர்.

வெடிக்காத குண்டை வைத்தது முகேஷ் வஸானியாவார். பின்னர் காரை கட்டாரே விற்றுவிட்டார். காரின் மூன்றாவது உரிமையாளரிடமிருந்துதான் அதனை மீட்டுள்ளனர் போலீசார்.

இவ்வழக்கில் கூடுதல் விபரங்கள் கிடைப்பதற்காக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவிடம் விசாரணை நடத்தவும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை முடிவுச் செய்துள்ளது. இதற்கான வாரண்டை அஜ்மீர்
முதன்மை ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து ஏ.டி.எஸ் பெற்றுள்ளது.
செய்தி:பாலைவனதூது 

Tuesday, 21 December 2010

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவராக இ.எம்.அப்துற்றஹ்மான் மீண்டும் தேர்வு

தேனி,டிசம்பர்.20:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக் குழுக்கூட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேனியில் நடைபெற்றது.சேர்மன் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கி பேசினார்.

அவர் தனது அறிமுக உரையில், தேசத்தை வலிமைப்படுத்தவும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களுடைய ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் போராட முன்வரவேண்டும் என உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஒரு கட்டுக்கோப்பான செயல்வீரர்கள் கொண்ட இயக்கம் எனவே சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழக்கூடிய செயல்வீரர்களை வார்த்தெடுப்பதில், ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை அவர்களிடையே வளர்ப்பதில் பாப்புலர் ஃபிரண்டின் அனைத்து மட்டத்திலுள்ள தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சமூக சீர்திருத்தத்தையும் அரசியல் முன்னேற்றத்தையும் வெறுக்கும் சக்திகள், குழுக்கள் பொய் பிரச்சாரத்தின் மூலம் இயக்கத்தின் கண்ணியத்தை, மரியாதையை குலைக்க முயற்சித்து வருவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு பாப்புலர் ஃபிரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரிப் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார் . அறிக்கையில், பரவலாக அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களின் சேர்க்கை நடைபெற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பாக தென்னிந்தியாவில் நல்ல வளர்ச்சி யடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார அரசியல் சூழல் குறித்த விவாதம் பொதுக் குழுவில் நடைபெற்றது. இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வும் வருங்காலத்தில் செய்யவேண்டிய முன்னெடுத்து செல்ல வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து இரண்டாண்டு கால பதவிக்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி புதிய தேசிய தலைவர்களை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு
சேர்மன்:இ.எம்.அப்துர் ரஹிமான்
துணைத்தலைவர்:முஹம்மத் அலி ஜின்னா
பொதுச் செயலாளர்: கே.எம்.ஷெரிப்
செயலாளர்:யாசிர் ஹசன்
பொருளாளர்:கே.பி.முஹம்மத் ஷெரிப்

தேசிய பொதுக்குழு கீழ்கண்ட தலைப்புகளில் ஆறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றியது.
பொதுவாழ்வில் ஊழல்
பீகார் தேர்தல் தரும் படிப்பினை
பொய் பிரசாரம் மற்றும் ஊடுருவல் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இடது சாரிகள் வலதுசாரிகளானது
அப்பாவி சிறைவாசிகள் விடுதலை
நீதி தேடும் பாப்ரி மஸ்ஜித்

இறுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சேர்மனுடைய இறுதி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .

பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பிதிநிதிகள் கலந்து கொண்ட பொதுக்குழுக் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு இந்திய மொழிகளில் உறுப்பினர்கள் கலாசார நிகழ்சிகளை நடத்தி திறமைகளை வெளிப்படுத்தினர்.

Source:popularfrontindia.org

Monday, 20 December 2010

கர்காரேக்கு ஹிந்துத்துவா அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் - திக் விஜய்சிங்

போபால்/புதுடெல்லி,டிச.20:கர்காரேக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் விடுத்த மிரட்டல் தொடர்பாக நான் கூறிய கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

"நான் எதனைக் கூறினேனோ அதில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை." செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கவே திக்விஜய் சிங் இதனை தெரிவித்தார்.

மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார்.

இவர் கூறிய கருத்திற்கு சங்க்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், திக்விஜய்சிங் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. எல்.கே.அத்வானி போன்றவர்கள் பிரக்யாசிங் தாக்கூரைச் சென்று சந்தித்தால் எவரும் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால், நான் எவரையும் சென்று சந்தித்தால் என்னை முஸ்லிம் ஆதரவாளன் என்றும், தேசத்துரோகி என்றும் முத்திரைக் குத்துவார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

"நீங்கள் வெளியிட்ட அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்தீர்களா?" என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திக் விஜய்சிங், அவர்களின் ஆசி இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தார்.
செய்தி:பாலைவ்னதூது

Sunday, 19 December 2010

எனது சுதந்திரத்தின் ஆயுள் குறைவு: ஜூலியன் அஸென்ஜே

லண்டன்,டிச.19:அமெரிக்கா தன்மீது தேசத்துரோக குற்றம் சுமத்துவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள சூழலில் தனது சுதந்திரத்திற்கு அதிக ஆயுள் இல்லை என விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே தெரிவித்துள்ளார்.

தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விடுவார்கள் என அஞ்சுவதாக அஸென்ஜே தெரிவித்தார்.

அஸென்ஜே தற்பொழுது வசிக்கும் 600 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஸஃபோக் எஸ்டேட்டில் வைத்து தனது தாயாருடன் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பை நிகழ்த்தினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவே தனக்கெதிரான சதித்திட்டத்தைக் குறித்து தெரிவித்தார் அஸென்ஜே.

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக மட்டுமே அமெரிக்க சட்டத்துறை இதுக்குறித்து பதிலளித்துள்ளது.

லண்டன் ஃப்ரண்ட்லைன் கிளப் ஸ்தாபகரான ஓகன் ஸ்மித்திற்கு சொந்தமான விசாலமான வீட்டில் தற்பொழுது அஸென்ஜே வசித்து வருகிறார். இது முடிவின் துவக்கமல்ல, துவக்கத்தின் இறுதியாகும். எனது முடிவில் எவ்வித மாற்றமுமில்லை. நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என மீண்டும் ஒரு முறை தெரிவித்தார் அஸென்ஜே.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் - அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Saturday, 18 December 2010

வாட்டர்போடிங் குற்றவாளிகளை பாதுகாக்கும் சி.ஐ.ஏ

வாஷிங்டன்,டிச.18:ரகசியச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை வாட்டர்போடிங் சித்திரவதைச் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜிம் மிச்சல், ப்ரூஸ் ஜெஸன் ஆகியோரின் வழக்கை நடத்துவதற்காக கட்டணத்தில் 50 லட்சம் டாலர் அளிக்க சி.ஐ.ஏ சம்மதித்துள்ளது.

வாட்டர்போடிங் சித்திரவதைக் கலையை கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவர்கள் என கண்டறியப்பட்ட இவ்விருவரும் தற்பொழுது வழக்கு விசாரணையை சந்தித்து வருகின்றனர்.

கைகால்களை கட்டிய பிறகு துணியால் முகத்தை மூடி பின்னர் மூச்சுத்திணறும் விதமாக முகத்தில் தண்ணீரை வேகமாக பாய்ச்சுவதுதான் வாட்டர்போடிங் என்ற சித்திரவதை.

ஏராளமான சிறைக் கைதிகளை வாட்டர்போடிங் என்ற சித்திரவதைக்கு ஆளாக்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரையும் தண்டனையிலிருந்து விடுவிக்கத்தான் சி.ஐ.ஏ பணத்தை அளித்துள்ளது என முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரியொருவர் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - பாலைவனத் தூது

எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் - ஹஸன் நஸ்ருல்லாஹ் சூளுரை

லெபனான்,டிச.18:"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முஹர்ரம் 10வது நாள் ஆஷூரா மற்றும் இமாம் ஹுஸைன்(ரலி...) அவர்களின் உயிர் தியாக நினைவு தினத்தில் ஆயிரக்கணக்கான லெபனான் மக்களிடையே ஹஸன் நஸ்ருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.

ஃபலஸ்தீன் மக்கள் தங்கள் உரிமையை கோருவதை கைவிட்டுவிடுமாறு கூற எவருக்கும் உரிமையில்லை. நாங்கள் எல்லா விஷயத்திலும் ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரப் லீக்கின் மேற்பார்வையில் இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்குவதாகும்.

இஸ்ரேல் கடலோரப் பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். 15 லட்சம் காஸ்ஸா மக்கள் வறுமையால் வாடுகின்றனர். மத்திய கிழக்கின் மோதலை தீர்க்க ஒரே வழி எதிர்த்துப் போராடுவதுதான். இவ்வாறு நஸ்ருல்லாஹ் உரையாற்றியுள்ளார்.

presstv

Thursday, 16 December 2010

கிராமத் தலைவராக பிச்சைக்காரர் தேர்வு

படோன்(உத்தரப்பிரதேசம்),டிச.16:வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்தைகள். கடந்த மாதம் நடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்ற போதிலும் இப்போதும் பிச்சையெடுத்துதான் வாழ்ந்து வருகிறார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஒரு காசு கூட இவர் செலவு செய்யவில்லை. கிராமத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவதாக இவர் அளித்த வாக்குறுதிதான் மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

கிராம மக்கள் மேம்பாட்டுக்கு, அரசு ஒதுக்கும் அனைத்து நிதியையும் செலவிடப் போவதாக அறிவித்துள்ளார் நாராயண் நாத். கிராமம் முழுவதும் மகளிர்க்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருவதே தனது முதல் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச கிராமத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய அரசியல் மாற்றம் வெகு விரைவில் பிற பகுதிகளுக்குப் பரவினால் நல்லது ஏற்படுவது நிச்சயம். மக்களின் இத்தகைய மனமாற்றம் வெறும் வார்த்தை ஜாலங்களைக் காட்டி வாழ்க்கை ஓட்டும் அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது உறுதி.

தினமணி

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

ஹைதரபாத்,டிச.16:கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

போலீஸாரால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார்.

நிரபராதிகளான முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்த நபர்களையும் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அரசுக்கு அதுக்குறித்து கவலை உண்டு. ஆனால் பணியின் ஒருபகுதியாக, சூழ்நிலையின் அடிப்படையில் போலீஸ் எவருக்கெதிராகவும் வழக்கு பதிவுச் செய்யும் என முதல்வர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் போலீசார் கல்விக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை தவறாக சேர்த்துள்ளனர் என உவைஸி சுட்டிக்காட்டினார்.

சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்காவிட்டால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள்தான் என்பது தெரியாமலேயே போயிருக்கும்.100 முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என அறிந்து விடுதலைச் செய்தபிறகும் அவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிட்டதால் எதிர்காலம் இருளடைந்துள்ளது என உவைஸி தெரிவித்தார்.

உவைஸியின் கருத்துக்களை எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரித்தார். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தும் பாஸ்கர ராவ் கமிட்டியின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக உள்துறை அமைச்சர் பி.ஸபீதா ரெட்டி அறிவித்தார். விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்படும் போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திருக்குர்ஆனுக்கு அவமதிப்பு:போராட்டம் நடத்திய 36 முஸ்லிம் இளைஞர்கள் கைது

மும்பை,டிச.16:மும்பை அந்தேரி சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரிண்டிங் பிரஸ்ஸை நடத்தி வருகிறார் டபிள்யூ.போஸ்கோ என்பவர். இவர் திருக்குர்ஆன் பிரதியின் மீது வைன் மதுபானத்தை வைத்து அருந்தியுள்ளார்.

திருக்குர்ஆனை இவ்வாறு அவமதித்த தகவல் கிடைத்தும் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி முஸ்லிம் இளைஞர்கள் சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போலீஸார் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போலீஸார் மீது முஸ்லிம் இளைஞர்களில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து 36 முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைதுச் செய்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாகினாகா போலீஸ் நிலையம் இதுக்குறித்து கூறுகையில், திருக்குர்ஆனை அவமதித்த சம்பவம் செவ்வாய்கிழமை 5.30க்கு நடந்தது. ஆனால், 8.30 க்கு போலீஸ் போஸ்கோவின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்துவிட்டது. ஆனால், யாரோ போஸ்கோவின் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற வதந்தியை பரப்பியதால் மக்கள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் இரவில் கூடி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் இரண்டு போலீசாருக்கு காயமேற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வருகைபுரிந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆரிஃப் நஸீம் கான் அப்பாவிகளை கைதுச் செய்யக்கூடாது என போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் உலமாக்கள், இமாம்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மதிப்புமிக்கவர்களை சந்தித்து உண்மையில் என்ன நடந்தது? என்பதைக் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

துணைபோலீஸ் கமிஷனரிடம் இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கவும், வெள்ளிக்கிழமை ஆஷூரா தினத்தை மக்கள் அமைதியாக கடைபிடிக்கவும் வழிவகுக்குமாறும் உத்தரவிட்டார்.

செய்தி:twocircles.net

Monday, 13 December 2010

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயற்சித்தது ஏன்? - திக் விஜய் சிங் கேள்வி

புதுடெல்லி,டிச.13:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக தன்னை விமர்சிக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடியாக திக் விஜய் சிங் புதிய கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.

கர்காரே விசாரணை மேற்கொண்டிருந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயன்றது ஏன்? என பா.ஜ.க தெளிவுப்படுத்த வேண்டுமென திக் விஜய் சிங் கோரியுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூரை கைதுச் செய்ததைக் கண்டித்து பிரதமரை அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் சென்று சந்தித்தது ஏன்?

பிரக்யாசிங்கை காண்பதற்கு ராஜ்நாத்சிங் சிறைக்குச் சென்றது ஏன்? என திக் விஜய் சிங் கேட்கிறார்.

கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுத் தொடர்பாக பிரதமரின் விளக்கத்தை கேட்டுள்ள பா.ஜ.க இந்த கேள்விகளுக்குத்தான் முதலில் பதிலளிக்கவேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் கரங்கள் உள்ளன என்பதுக் குறித்து எனக்கு சந்தேகமில்லை. தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் வலதுசாரி ஹிந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டுள்ளன என நான் கூறவில்லை. மாறாக, ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதைத்தான் தெரிவித்திருந்தேன். அது உண்மையானதாகும் என தான் முன்புக் கூறியதை உறுதிச்செய்தார் திக் விஜய்சிங்.

இது காங்கிரஸுடன் தொடர்புடைய பிரச்சனை இல்லை எனவும், தானும், கர்காரேயும் தொலைபேசியில் உரையாடிய விஷயமாகும் எனவும் திக் விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

கர்காரேத் தொடர்பான அறிக்கையின் காரணமாக திக் விஜய்சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.கவுக்கு பதிலடிக் கொடுக்கும்விதமாக தனது நிலைப்பாட்டை உறுதிச்செய்துள்ளார் திக்விஜய்சிங்.

சிங்கின் அறிக்கை அறிவு சூன்யமானது எனவும், அவரின் கூற்று பாகிஸ்தானுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும் எனவும், அவர் தனது அறிக்கைக்கு மன்னிப்புக் கோரவில்லையானால் காங்கிரஸ் கட்சி அவரை வெளியேற்றவேண்டும் என பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் வெங்கய்யா நாயுடு கோரியிருந்தார்.

ஆனால், திக்விஜய் சிங்கின் அறிக்கை பெரிய சர்ச்சையை கிளப்புவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைமையின் பதில் அமைந்திருந்தது.

திக் விஜய்சிங்கின் அறிக்கையில் உடன்படுவதுக் குறித்த கேள்வியே எழவில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜனார்தன் திரிவேதியின் பதிலாகும்.
செய்தி:பாலைவனதூது 

கடந்த இருபது வருடங்களில் கஷ்மீரில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்

ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

2002-100 பேர், 2010-4, 2009-6, 2007-9, 2006-17, 2005-40, 2004-62, 2003-52, 2001-76, 2000-35 என புள்ளிவிபரம் கூறுகிறது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்.
செய்தி:பாலைவனதூது 
AQ

விக்கிலீக்ஸ்:அஸென்ஜாவை விசாரணைச்செய்ய இயலாது - ஐ.நா பிரதிநிதி

கான்பெர்ரா,டிச.13:ரகசிய விபரங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் பிரிவுகள் இல்லை என கருத்து சுதந்திர பாதுகாப்பிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் பிராங்க் லாரியூ தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸின் ஸ்தாபகருக்கெதிராக குற்றம் சுமத்தவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரவும் அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையுமில்லை என தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

அஸென்ஜாவுக்கெதிராக இரண்டு விவகாரங்கள் உள்ளன. ஒன்று பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கு. இதுக்குறித்து நான் ஒன்றும் கூறவியலாது. குறிப்பிட்ட அந்த வழக்கில் அவருக்கு சட்டரீதியான எல்லா உரிமைகளும் அனுமதிக்கவேண்டும்.

ஆனால், விக்கிலீக்ஸ் ஒரு ஊடகம் என்ற நிலையில் செயல்பட்டதை குற்றம் சொல்லமுடியாது. தகவல்களை பரிமாறுவதில் பொறுப்பேற்க தேவையில்லை என்பது பொதுவான தத்துவமாகும்.

வெளியிடும் விபரங்கள் தெளிவாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, ஏதேனும் நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்தாலோ தான் இக்காரியத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியிடும் தகவல்களால் ஒரு அரசுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மட்டும் அதனை தடைச்செய்வதற்கோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ இயலாது என பிராங்க் மேலும் கூறினார்.

குர்ஆனை எரிப்பதற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாருக்கு பிரிட்டனில் நுழைய தடைவிதிக்க கோரிக்கை

லண்டன்,டிச.13:புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாருக்கு பிரிட்டனில் நுழைய அனுமதி வழங்கக்கூடாது என தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு அழைப்புவிடுத்த அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் பிரிட்டனில் நடைபெறவிருக்கும் இங்கிலீஷ் டிஃபன்ஸ் லீக் பேரணியில் கலந்துக்கொள்ளவிருக்கிறார்.

இவ்விவகாரத்தில் தலையிட தீவிரவாத எதிர்ப்பு அமைப்பான ஹோப் நோட் வைட் பிரிட்டன் உள்துறை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றில் மிகப்பெரிய பேரணி பிப்ரவரி ஐந்தாம் தேதி பெட்ஃபோட்ஷெயரில் நடக்கவிருப்பதாக இனவெறி அமைப்பான இ.டி.எல் ஃபேஸ் புக்கில் அறிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் 'இஸ்லாத்தில் சாத்தானியத்தனம்' என்பதைக் குறித்து டெர்ரி ஜோன்ஸ் உரை நிகழ்த்துவார் எனவும் இ.டி.எல் அறிவித்துள்ளது.

தனக்கு பிரிட்டனில் குர்ஆனை எரிக்கும் திட்டம் இல்லை என பி.பி.சியிடம் டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். பக்கிங்காம் அரண்மனையை மஸ்ஜிதாக மாற்றவேண்டும் எனவும், பிரிட்டனின் ராணி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சிலர் கூறுவதாக டெர்ரி ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

தீவிரவாதிகளுக்கு மட்டுமே டெர்ரி ஜோன்ஸின் வருகையினால் ஆதாயம் கிடைக்கும் என ஹோப் நோட் வைட்டின் இயக்குநர் நிக் லோல்ஸ் தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது 

Saturday, 11 December 2010

நிவாரண கப்பல் தாக்குதல்:துருக்கியிடம் மன்னிப்புக்கோர இயலாது - இஸ்ரேல் திமிர்

ஜெருசலம்,டிச.11:காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட கப்பலை காஸ்ஸாவிற்கு அருகில் வைத்து தடுத்து நிறுத்தி கப்பலிலிருந்த துருக்கியைச் சார்ந்த ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற நடவடிக்கைக்கு துருக்கியிடம் மன்னிப்புக்கோர இயலாது என இஸ்ரேல் திமிர்தனமாக பதிலளித்துள்ளது.

மன்னிப்புக்கோரினால் சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இத்தகையதொரு தீர்மானம் எடுத்ததாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டானி அய்லோன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு மோசமான தூதரக உறவை புனர் நிர்மாணிப்பதற்காக இஸ்ரேல் துருக்கிக்கு பிரதிநிதிக் குழுவை அனுப்பியுள்ளது.

நிவாரணக் கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதற்கு காரணம் சுய பாதுகாப்புதான் என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்தார் அய்லோன்.

கடந்த மே மாதம் நடந்த இந்த தாக்குதலுக்காக இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும், இழப்பீடு வழங்கவேண்டும் என்பது துருக்கியின் கோரிக்கை.

காஸ்ஸாவின் மீதான இஸ்ரேலின் தடையை வாபஸ்பெற வேண்டும் என நேற்று முன்தினம் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் வலியுறுத்தியிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள் தானா? - கலைஞர் அரசின் கயவாளித்தனம்

திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.

இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளை ஏன் பூணூல் அணிந்தவர்களாகவும், பொட்டு வைத்தவர்களாகவும் சித்தரிக்கவில்லை. தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய சொத்தா? இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும்.

தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.

Thursday, 9 December 2010

இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமதிப்பு!

வாஷிங்டன்: இந்தியப்பெண் தூதர் ஒருவர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரம்பரிய சேலை அணிந்து சென்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதரை மிசிசிப்பி விமான நிலைய அதிகாரிகள் சோதனை  செய்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். இவர் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.  அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல், மீராசங்கரை வி.ஐ.பி. வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்‌‌கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால், மீரா இந்த மாதிரியான ‌சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியத்தூதர் சேலை அணிந்திருந்ததால் சோதனை நடத்தப்பட்டதாக மீராசங்கர் உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
செய்தி:இந்நேரம்