Friday, 19 November 2010

நாவடக்கம் தேவை - உலக வல்லரசுகளிடம் அஹ்மத் நஜாத்

பாகு,நவ.19:ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடைவதற்கு உலகின் வல்லரசுகள் எனக் கூறுவோர் நாவை அடக்கிக் கொள்ளவேண்டும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

காஸ்பியன் கடல் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அஸர்பைஜானுக்கு வருகைத்தந்த அஹ்மத் நஜாத் அந்நாட்டு தலைநகரில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: 'ஈரானை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிப்பெற வேண்டும் என விரும்புவோர் தாக்குதல்காரர்களைப் போல் பேசக்கூடாது.

உலக வல்லரசுகளில் சிலர் சிந்திப்பது தாக்குதல் நடத்துவோரைப் போலாகும். நிர்பந்தம் மற்றும் அச்சுறுத்தலால் ஆதாயம் பெறலாம் என அவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் இப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், ஈரானும் அதே பாணியில் பேசும்.

அச்சுறுத்தல் மூலமாகவோ, தடை மூலமாகவோ ஈரான் குடிமக்களை மாற்றிவிடலாம் என எவரும் கருதவேண்டாம். இவ்வாறு அஹ்மத் நஜாத் கூறினார்.

உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவுடன் அஹ்மத் நஜாத் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் -  பாலைவனத் தூது

No comments:

Post a Comment