
துபாய் : துபாயில் மாடர்ன் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 4 வயதான இந்திய பள்ளி சிறுமி பள்ளி பேருந்து டிரைவர், கண்டக்டர், சூப்பர்வைஸர் என மூன்று நபர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட செய்தியை கல்ப் நியூஸ் வெளியிட்டதால் இந்திய பெற்றோர்கள் கொந்தளித்து தங்கள் எதிர்ப்பை நேரிடையாகவும் இணையத்தின் மூலம் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் இச்செயல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்பேருந்தில் கடைசியாக இம்மாணவி தான் இறங்குவார். அப்படி அன்று இறங்கிய மாணவி திக்பிரமை பிடித்தவர் போல் வரவே, அவளின் உடையை கழற்றிய அப்பெண்ணின் தாய் அவ்வுடையில் வழமைக்கு மாறாக ரத்த கறைகள் காணப்பட, மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவர் பயந்தது போலவே அப்பெண் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதால் ஏற்பட்டது தான் அந்த ரத்தகறை என்று முடிவு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த தாய் அதை யாரிடம் கூற பயந்து தன் பெண்ணை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு விடுப்பில் சென்றுள்ளார்.
பின் இந்தியாவில் மருத்துவர்களிடம் காண்பித்து தன் பெண் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டார். பின் விடுமுறை முடித்து துபாய் திரும்பியவர் பர்துபாய் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அச்சிறுமியின் கூற்று படி அனைத்து சிறுமிகளையும் இறக்கி விட்ட பின்பு அடையாளம் தெரியாத இடத்திற்கு பேருந்தை ஓட்டி சென்றவர்கள் அங்கு பேருந்தை நிறுத்தி மிட்டாய் வாங்கி கொடுத்து மூவரும் சேர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர்.
அனைத்து பெற்றோர்களும் இப்பள்ளியை நடத்தும் புகழ் பெற்ற குழுமமான ஜெம்ஸ் மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது என்றும் இனி மேலாவது பேருந்தில் பெண் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். சுமார் 700 பேருந்துகளை இயக்கும் ஜெம்ஸ் நிர்வாகம் இக் கோரிக்கையை அமுல்படுத்தும் என அதன் இயக்குநர் வர்கீஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது பற்றி கருத்து தெரிவித்த புலனாய்வு பிரிவு தலைவர் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி குற்றம் சாட்டப்பட்ட 27, 36, 44 வயதுடைய மூவரும் இக்குற்றத்தை ஒப்பு கொண்டனர் என்றும் வன் புணர்வு செய்யப்பட்ட சமயத்தில் அப்பெண் அணிந்த ஆடையை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் டி.என்.ஏ முடிவுகள் வந்தவுடன் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தி :பாலைவனதூது
No comments:
Post a Comment