Monday, 31 January 2011

அமெரிக்க அதிகாரிக்கு மரணத்தண்டனை விதிக்கக்கோரி பாகிஸ்தானில் பேரணி

இஸ்லாமாபாத்,பிப்.1:இரண்டுபேரை சுட்டுக் கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு மரணத் தண்டனை வழங்கக்கோரி நூற்றுக்கணக்கான மக்கள் லாகூர் நகரத்தில் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அந்நாட்டு தூதரக அதிகாரியை விடுவிக்கக் கூடாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட அவர் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்க அதிகாரி வழிப்பறிக் கொள்ளையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் துப்பாக்கியால் சுட்டார் எனவும், எனவே அவரை விடுதலைச்செய்ய வேண்டுமென அமெரிக்கா முன்னர் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

டேவிஸிற்கு தூதரக பிரதிநிதிகளுக்கான சிறப்பு சலுகை உண்டு என வாதித்தது அமெரிக்கா. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்ததோடு துப்பாக்கியை கைவசம் வைத்திருக்கும் உரிமை இல்லை என தெரிவித்தது. இதற்கிடையே, டேவிஸை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் எனக்கோரும் மனுவில் லாகூர் உயர்நீதிமன்றம் அரசின் நிலைப்பாட்டை ஆராய்ந்தது.

பஞ்சாப் மாகாண அட்டர்னி ஜெனரல் , அட்வக்கேட் ஜெனரல் ஆகியோரிடம் இன்று, நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க இம்மனுவில் வாதத்தை கேட்ட முதன்மை நீதிபதி இஜாஸ் அஹ்மத் சவ்தரி உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் -

No comments:

Post a Comment