Thursday, 20 January 2011

எடியூரப்பா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது: அமைச்சரவை தீர்மானம்!

நில ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் எடியூரப்பா அரசுக்கும் ஆளுநர் பரத்வாஜுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. திங்கள் கிழமையன்று எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், ஆளுநரை திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், எடியூரப்பா டில்லி விரைந்தார். அங்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்பட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெற பா.ஜ.க. மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். பின்னர் இரவோடு, இரவாக அவர் பெங்களூர் திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை காலை 11 மணி அளவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவையின் அவசர கூட்டம் கூடியது. இக்கூட்டத்துக்குப் பின் சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நில முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மற்றும் காவல் துறை அமைச்சர் அசோக் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று இரு வழக்கறிஞர்கள் ஆளுநரிடம் மனு கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். நிலமுறைகேடு வழக்கில் ஏற்கனவே லோக் அயுக்தா நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதே வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மராஜ் தலைமையில் நீதி விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை லோக் அயுக்தா விசாரிக்க வேண்டுமா அல்லது நீதி விசாரணை கமிஷன் விசாரிக்க வேண்டுமா என்பது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் காவல் துறை அமைச்சர் மீது வக்கீல்கள் கொடுத்த மனுவின் ஆதாரத்தின்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளிப்பது சரியல்ல.

இதனால் வக்கீல்கள் கொடுத்த மனுவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு வேண்டுகோளாக அனுப்பி வைக்க உள்ளோம். ஆளுநர் எங்களது வேண்டுகோளை ஏற்பார் என்று நம்பிக்கை உள்ளது. எங்களது வேண்டுகோளை ஏற்க வேண்டியதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளோம்.

ஆளுநர் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர். இதனால் உண்மையை உணர்ந்து அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம். இதுபோன்ற தீர்மானங்களை எடுத்து ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்க அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் தீர்மானம் எடுத்து உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
செய்தி :பாலைவனதூது

No comments:

Post a Comment