Friday, 22 April 2011

பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் அடாவடி:25 பேர் பலி

army flight
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆளில்லா விமானத் தாக்குதல் தொடரும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வஸீரிஸ்தானில் 25 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும், சாதாரண மக்களும் அடங்குவர் என ஜியோ நியூஸ் நிறுவனம் கூறுகிறது.

மிர் அலிக்கு அருகிலுள்ள ஸ்பின்வாம் கிராமத்தை இலக்காக வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வடக்கு வஸீரிஸ்தானில் முக்கிய நகரமான மிரோன்ஷாவில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஆளில்லா விமானத்தாக்குதலை நிறுத்த வேண்டுமென பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்து சில தினங்களே கழிந்துள்ள சூழலில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஹாஃபிஸுல் பஹாதூரின் தாலிபான் பிரிவு உறுப்பினர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் ஒரக்ஸாய் பழங்குடியினர் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த தாலிபான் போராளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சி.என்.என் கூறுகிறது.

வடக்கு வஸீரிஸ்தானில் இவ்வாண்டு நடக்கும் 20-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.ஏராளமான ஆளில்லா போர்விமானங்கள் இப்பகுதியில் வட்டமிடுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்துமாறு நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த அமெரிக்க ராணுவ தளபதி அட்மிரல் மைக் முல்லனிடம் பாகிஸ்தானின் ராணுவத்தளபதி வலியுறுத்தியிருந்தார்.

தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்பு கிளம்பும் எனவும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமெனவும் பாக்.தளபதி கயானி முல்லனிடம் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment