
டமாஸ்கஸ்:சிரியாவில் வெள்ளிக்கிழமை போலீஸ் நடத்திய காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டோர் மீது நேற்று போலீஸார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸில் தெற்கு கிராமமான இஸ்ராவில் போலீஸ் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது. இறுதிஸ் சடங்கில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் கோபமடைந்த போலீஸார் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றினர்.
வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொன்னூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போராட்டம் துவங்கியதிலிருந்து ஒரேநாளில் இவ்வளவு நபர்கள் கொல்லப்படுவது இது முதல் தடவையாகும். 48 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசரநிலை சட்டம் வாபஸ் பெற்ற மறுநாள் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது போலீஸ்.வெளிநாட்டினர் இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்படுவதாக அரசு கூறுகிறது.
இறுதிச்சடங்கில் தராவிலிருந்து நூற்றுக்கும் அதிகமான பேருந்துகளில் மக்கள் இஸ்ராவிற்கு வந்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. மேலும் அதிகமான எதிர்ப்பாளர்கள் இஸ்ராவிற்கு வருவதை பல நகரங்களிலும் போலீஸ் தடுத்து நிறுத்தியது. மிதான், பர்ஸா, ஹரஸ்தா ஆகிய இடங்களில் நேற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை போலீஸ் தாக்குதலில் ஹம்ஸ் மற்றும் இஸ்ராவில் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.ஏழு வயதான இரண்டு சிறுவர்களும் இஸ்ராவில் கொல்லப்பட்டதாக ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவித்துள்ளது.எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்க ஆயுதங்களை பிரயோகிப்பதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தைக் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கடுமையான கவலைகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிரியாவில் நடப்பதாக பிரான்சின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment