ஹைதராபாத்:தந்திரங்களின் வாயிலாக அறிவீனர்களின் உள்ளங்களையும் கூடவே அவர்களின் வளங்களையும் கொள்ளைக் கொண்ட சாயிபாபா தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாதவாறு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்நிலையில் சாயிபாபாவின் அறக்கட்டளையின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் யாருக்கு என்பதுக் குறித்து தகராறு துவங்கியுள்ளது.
சத்யசாய் மத்திய அறக்கட்டளையின் தற்போதைய செயலாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கெ.சக்ரவர்த்தி மற்றும் சாயிபாபாவின் சகோதரி மகனும் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ஆகியோருக்கிடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது.
அனந்தபூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ள சக்ரவர்த்திக்கு அறக்கட்டளை விவகாரங்களில் வலுவான செல்வாக்கு உள்ளது. ஆனால், சாயிபாபாவின் பக்தர்களுக்கும், பொது மக்களுக்குமிடையே மிகவும் பிரபலமானவர் ரத்னாகர் ஆவார்.
சாயிபாபாவின் குடும்ப உறுப்பினர்களிடையேயும் வாரிசுரிமை தகராறு துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, அறக்கட்டளையின் சொத்துக்களை தம் வசம் கொண்டுவர ஆந்திர அரசும் முயற்சிகளை துவக்கியுள்ளது. 1966-ஆம் ஆண்டு சாரிட்டபிள் அண்ட் ரிலீஜியஸ் எண்டோவ்மெண்ட் சட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட முன்மாதிரியின் அடிப்படையில் சாயிபாபாவின் சொத்துக்களையும் அரசு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக நிதித்துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான எல்.வி.சுப்ரமணியத்தை அறக்கட்டளையின் பொருளாதார காரியங்களைக் குறித்து ஆராய நியமித்துள்ளது ஆந்திர அரசு.
சாயிபாபா தலைவராக செயல்படும் ஸ்ரீசத்யசாயி அறக்கட்டளைக்கு நாட்டின் உள்ளேயும், வெளியேயும் கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. சாயிபாபாவின் தலைமையகம் செயல்படும் புட்டபர்த்தியின் பெரும்பாலான பகுதிகள் அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும்.
சாயிபாபாவின் தலைமையகமான பிரசாந்தி நிலையம் உள்பட, அங்குள்ள விமானநிலையம், ரெயில்வே நிலையம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உள்ளரங்கு ஸ்டேடியம், கல்வி நிறுவனங்கள் ஆகியன இதில் உட்படும். பெங்களூரில் வைட் ஃபீல்டிலும் அறக்கட்டளையின் கீழ் மருத்துவமனை செயல்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1200 ஸ்தாபனங்கள் செயல்படுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. 1972 ஆம் ஆண்டு முதல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு நன்கொடைகளை பெற்றுவந்தாலும் 2000-ஆம் ஆண்டுமுதல் பணம் மட்டுமே பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டு வருகிறது.
அறக்கட்டளையின் உண்மையான சொத்துக்களின் கணக்கு விபரங்கள் அரசுக்கு இதுவரை கிடைக்கவில்லை. பல விபரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. தணிக்கை அறிக்கைகளை மிக கவனமான பரிசோதனைக்கு உட்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment