Sunday, 24 April 2011

மிஸ்ரடாவில் இருந்து வெளியேறுகிறது லிபிய ராணுவம்

ap_libya_rebels_jef_110419_wg
திரிபோலி:கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றிய மிஸ்ரடா நகரில் இருந்து வெளியேறுவது என லிபிய ராணுவம் முடிவு செய்துள்ளது.

மிஸ்ரடா நகர மக்கள் மற்றும் அருகில் உள்ள பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் அந்த நகரை விடுவது எனவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது.

அதிபர் கத்தாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் லிபியாவின் பல பகுதிகளை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து மீண்டும் அப்பகுதிகளை கைப்பற்ற லிபிய ராணுவம் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த மிஸ்ரடா நகரை ராணுவம் கைப்பற்றியது. எனினும் கிளர்ச்சியாளர்கள் அங்கு மறைந்துள்ளனர். அவர்கள் ராணுவத்தினரிடம் சரண் அடையவில்லை. அவர்கள் மீது லிபிய ராணுவம் வான் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது.

இதையடுத்து அங்கு லிபிய ராணுவத்துக்கு எதிராக பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகள், மிஸ்ரடா நகரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்நிலையில் நேட்டோ படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக மிஸ்ரடாவில் இருந்து வெளியேறுவது என லிபிய படைகள் முடிவு செய்துள்ளன.

லிபிய வெளியுறவு இணையமைச்சர் கலேத் கைம் வெள்ளிக்கிழமை இரவு இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாங்கள் மிஸ்ரடாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். அந்த நகர மக்களிடமும் அந்நகருக்கு அருகே உள்ள ஸிலெதென், தர்ஹுனா, பாணி வாலித், தவர்கா ஆகிய சிறு நகரங்களில் உள்ள மக்களிடமும் சுற்று வட்டாரங்களில் உள்ள பழங்குடி மக்களிடமும் மிஸ்ரடா நகரை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் மிஸ்ரடா நகருக்குள் சென்று கிளர்ச்சியாளர் களிடம் பேச்சு நடத்துவார்கள். கிளர்ச்சியாளர் களை சரண் அடையச் செய்யும் பொறுப்பை அவர்களிடம் விடுகிறோம். கிளர்ச்சி யாளர்கள் சரண் அடையவில்லை என்றால் சண்டை மூலம் அவர்களை மக்கள் வீழ்த்துவார்கள்” என்றார் அவர்.

மிஸ்ரடாவில் இருந்து லிபிய படைகள் வெளியேற உள்ளதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய திரிபோலியில் உள்ள லிபிய அதிபர் கத்தாஃபியின் வீட்டு அருகே உள்ள பதுங்கு குழி மீது நேட்டோ படைகள் குண்டு வீசின. இது மிகவும் சக்தி வாய்ந்த வெடி குண்டு தாக்குதல் என்றும் இதில் 3 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு லிபியாவின் பெங்க்ஸய் நகருக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் செய்தி யாளர்களிடம் பேசுகையில் ” அதிபர் கத்தாஃபி சொந்த நாட்டின் மக்கள் மீதே போர் தொடுத்துள்ளார். அவரை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். கத்தாஃபிக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் எல்லாம் உதவ வேண்டும். ஜனநாயகம் வேண்டி போராடும் கிளர்ச்சியாளர்களுக்கும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. லிபிய கிளர்ச்சியாளர்கள் வீரம்மிக்கவர்கள்.” என்றார்.

அமெரிக்க கூட்டுப் படைகளின் துணைத் தலைவர் மைக் முல்லனும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். லிபியாவில் அல்கொய்தா நடவடிக்கைகள் ஏதும் இல்லை” என்றார்.

No comments:

Post a Comment