
வாஷிங்டன்:மக்கள் எழுச்சி வலுவடைந்துள்ள யெமன் நாட்டில் நிலைமைகளை குறித்து விவாதிக்க கூடிய ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எந்தவொரு தீர்மானமும் எடுக்காமல் கலைந்தது. யெமன் விவகாரத்தைக் குறித்து விவாதிக்க முதன்முதலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடியது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யெமன் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படுமெனவும், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு உத்வேகமளிக்கவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முடிவு மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ரஷ்யாவின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஏகமனதான தீர்மானம் மேற்கொள்ள இயலவில்லை என ஐ.நா பிரதிநிதியொருவர் தெரிவிக்கிறார். ஆனால், எதிர்ப்பாளர்களுடனும், யெமன் அரசுடனும் கட்டுப்பாட்டை பேணுமாறும், பேச்சுவார்த்தைகளை தொடருமாறும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே, யெமன் தலைநகரமான ஸன்ஆவிலும், தெற்கு நகரமான தாஇஸிலும் எதிர்ப்பாளர்களின் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. ஹுதைதாவில் எதிர்ப்பாளர்களின் முகாமில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment