Monday, 23 May 2011

பலஸ்தீன் சிறுவனுக்கு 6 மாத சிறைத்தண்டனை!

பிளின் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் அம்ஜத் அயித் அபூ றஹ்மா. தன்னுடைய கிராமத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெற்றுவரும் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிரான அமைதிப் பேரணியில் கலந்துகொண்டதற்காக நான்கு மாதங்களுக்கு முன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டான்.

சாத்வீகமான முறையில் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட அந்தச் சிறுவனுக்கு அண்மையில் இஸ்ரேலிய ஒஃபர் ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

பள்ளி செல்லும் வயதில் உள்ள இவனைப் போன்ற 300 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எத்தகைய விசாரணைகளும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, நப்லஸ் நகரையடுத்துள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தின் முன்னால் குழுமிய பலஸ்தீன் பெண்கள், நீண்ட காலமாக எத்தகைய நியாயமான காரணங்களுமின்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எத்தகைய விசாரணைகளுமின்றி, அடிப்படை மனித உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் கைதிகளின் நிலையை சர்வதேச உலகின் கவனத்துக்குக் கொண்டுவருமுகமாக இந்த சாத்வீகப் போராட்டத்தை பலஸ்தீன் கைதிகள் சங்கமும் பலஸ்தீன் கைதிகள் குடும்ப அமைப்பும் ஒருங்கிணைந்து ஒழுங்குசெய்திருந்தன.

பலஸ்தீன் கைதிகள் தமது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி மறுப்பு, மிகக் கடுமையான தண்டனை முறைமைகள், காற்றோட்டமோ வெளிச்சமோ அற்ற ஒடுக்கமான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையிலே அடைத்தல் முதலான காட்டுமிராண்டி நடைமுறைகள் ஒழிக்கப்பட்டு பலஸ்தீன் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலையாய கோரிக்கையாக இருந்தது.

No comments:

Post a Comment