கடந்த திங்கட்கிழமை (23.05.2011) ஹமாஸ் அரசியல் பிரிவுப் பிரமுகரான சாலிஹ் அல் அரோரியின் தாயார் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்.
அரோரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டைத் திடீரெனச் சுற்றிவளைத்த ஆக்கிரமிப்பு இராணுவம், தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீட்டுத் தளபாடங்களையும் பிற பொருட்களையும் தாறுமாறாக இழுத்துச் சேதப்படுத்தியுள்ளது.
தனது தாயார் கைதுசெய்யப்பட்டது குறித்துக் கருத்துரைத்த அரோரி, "என்னுடைய தாயார் ஆயிஷாவுக்குத் தற்போது 70 வயதாகிறது. வயோதிபத்துக்கே உரிய பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள அவருக்குப் பிறருடைய உதவியின்றி சுயமாக நடக்கக்கூட முடியாது. இந்நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் அவரது வயதையோ, உடல் நிலையையொ கருத்திற் கொள்ளாது மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளமை வருந்தத்தக்கது. அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் இஸ்ரேலிய அதிகாரத் தரப்பினரே ஏற்கவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு சில தினங்கள் முன்பு அரோரியின் மகன் ஆஸிம் 'விசாரணைக்காக' என்ற போர்வையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸின் அரசியல் பிரிவுப் பிரமுகரான சாலிஹ் அல் அரோரி சுமார் 18 வருட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் கடந்த வருடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசினால் சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அரோரியின் வயது முதிர்ந்த தாயாரைக் கைதுசெய்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செயலை, 'கோழைத்தனமானது' என 'அஹ்ரார்' - கைதிகளுக்கான கற்கைநெறி மையம் விமர்சித்துள்ளது.
அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கருத்துரைக்கையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பலஸ்தீன் விடுதலைச் செயற்பாட்டாளர்களின் தாய்மாரைக் கைதுசெய்யும் இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கையில் இறங்குவது என்பது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலதடவை நடந்துள்ளது. உதாரணமாக, கடந்த வருடம் ராபியா பிலால் கைதுசெய்யப்பட்டு வதைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பல குழந்தைகளின் தாயான யஹ்யா அய்யாஷின் மனைவியும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பட்டியல் இப்போதும் நீண்டு செல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment