Tuesday, 24 May 2011

ஒபெக் மாநாட்டில் அஹ்மதிநிஜாத் கலந்துகொள்ள மாட்டார்'

அண்மையில் நடைபெறவுள்ள பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளுக்கான 'ஒபெக்' மாநாட்டில் ஈரானிய அதிபர் அஹ்மதிநிஜாத் கலந்துகொள்ளவுள்ளார் என்ற வதந்தி பரவலாக அடிபடும் நிலையில், ஈரானிய எண்ணெய்வள அமைச்சகப் பேச்சாளர் ஷொஜதீன் பஸார்கனி அதனை மறுத்துள்ளார்.

இது குறித்துப் பேசியபோது, "தான் எதிர்வரும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளுக்கிடையிலான மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை" என்று ஈரானிய அதிபர் தன்னிடம் நேரடியாகவே தெரிவித்தார் என எண்ணெய்வள அமைச்சகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஈரானிய அதிபருக்குப் பதிலாக மேற்படி மாநாட்டில் ஈரானிய அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்படுவார்" என்றும், "அவர் ஒபெக் மாநாட்டு அமர்வு, ஐரோப்பிய யூனியன்-ஒபெக் இணை அமர்வு ஆகிய இரண்டு அமர்வுகளிலும் பங்கேற்பார்" என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சக மட்டத்திலான அடுத்த ஒபெக் மாநாட்டுக்கான சந்திப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இடம்பெறவுள்ளது. இதன் உறுப்பினர்கள் என்றவகையில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடோர், ஈரான், ஈராக், குவைட், லிபியா, நைஜீரியா, கட்டார், சவூதி அரேபியா, அமீரகம், வெனிசூலா முதலான 12 நாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment