Sunday, 1 May 2011

அருணாச்சல்:முதல்வரை தேடும் பணி தீவிரம்

pawan_hans_heli_1
இட்டாநகர்:கடந்த சனிக்கிழமை காலை அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மர்மமான முறையில் மாயமானது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போதிலும் இதுவரை எதனையும் கண்டறிய முடியவில்லை. அவர் பயணித்த ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

விமானப்படையின் சுகோய், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக ஞாயிற்று கிழமை சுமார் 2 மணி நேரம் மட்டுமே தேடும் பணி நடைபெற்றது. முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணமல் போய் 2 நாள்கள் ஆன நிலையில் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் ரஞ்சீவ் சாகு, ஷில்லாங்கில் ஞாயிற்று கிழமை கூறியதாவது: இரண்டு சுகோய் ஹெலிகாப்டர்கள், எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஆகியவை தடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டான் எல்லைப் பகுதி, தவாங்- இடாநகர் இடையே காணமல் போன ஹெலிகாப்டர் தென்படுகிறதா என்று அவர்கள் தேடினர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

திஸ்பூர், குவாஹாட்டி ஆகிய இடங்களுக்கு மேலும் 2 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக அவற்றை பணியில் ஈடுபடுத்த முடியவில்லை. வான் வழியாக மட்டுமல்லாது, முதல்வரின் ஹெலிகாப்டர் சென்ற பகுதியில் இந்திய ராணுவத்தின் 2,400 வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து தரைவழியாகவும் தேடி வருகின்றனர். இந்திய-பூடான் எல்லையில் இப்பணி நடைபெறுகிறது. நாளையும் பணி தொடரும் என்றார் அவர்.

இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை, மாநில போலீஸாரும் காணாமல் போன ஹெலிகாப்டரை தரை வழியாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் காணாமல்போனது குறித்து மக்களவை தலைவர் மீராகுமார் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் முகுல் வாஷ்னிக், வி.நாராயணசாமி ஆகியோர் அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகருக்கு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment